கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணி 1வது பிரதான சாலையை சேர்ந்தவன் தமீம் அன்சாரி (14). கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக இவனை பிடித்து நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தார்.
விசாரணையின்போது, சிறுவனின் வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டி சுட்டார். இதில், சிறுவன் பலத்த காயம் அடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் 2000ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்துள்ளார். 2011ம் ஆண்டு மெரினா காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருந்தபோது, திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஒருவரை விசாரித்தார். அப்போது, கடும் கோபம் அடைந்த புஷ்பராஜ் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கடுமையாக உதைத்தார். பின்னர் அவரது தொடையில் துப்பாக்கியால் சுட்டார். அப்போது, இந்த வழக்கில் தலையிட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியை மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், 2013 ஜனவரி 21ல் நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக புஷ்பராஜ் பதவி ஏற்றுள்ளார். அங்கு அவரது நடவடிக்கை விமர்சனத்தை ஏற்படுத்தியது. தற்போது, இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர், போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். தேனாம்பேட்டையிலும் எஸ்ஐயாக பணியாற்றியுள்ளார். இதனால் அவரைக் காப்பாற்ற பல உயர் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால்தான் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் புஷ்பராஜிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த துப்பாக்கி, தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சிறுவனின் தாய் சபீனா பானு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து, 28ம் தேதி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சிறுவன் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


No comments:
Post a Comment